திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கூரியர் செல்ல குறைந்தது மூன்று நாட்கள் ஆகிறது. ஆனால், விமான நிலைய கொரியர் டெர்மினல் செயல்படத் தொடங்கியதும், மருந்துப் பொருட்கள் கூட ஒரு நாளில் சிங்கப்பூர் சென்றடையும்

இந்த வசதி மூலம் திருச்சி மற்றும் பிற மாவட்ட மக்கள் 46 நாடுகளுக்கு விரைவாக பொருட்களை அனுப்பலாம் ...

திருச்சி விமான நிலைய ஆணையம் (AAI), பழைய விமான நிலைய முனையத்தில் ஏர் கூரியர் சேவையைத் தொடங்க உள்ளது. இதன் மூலம் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக பார்சல் அனுப்பலாம். குறிப்பாக தென்கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள 46 நாடுகளுக்கு விரைவாக பார்சல் அனுப்ப முடியும். ஒரு மாதத்திற்குள் இந்த சேவை தொடங்கப்படும்.

திருச்சி விமான நிலையத்தில் உள்ள எக்ஸ்பிரஸ் கொரியர் டெர்மினல் 2,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது. இந்த டெர்மினல் மூலம் கொரியர் சேவை தொடங்க விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் எஸ். ஞானேஸ்வர ராவ் தெரிவித்துள்ளதாவது:

திருச்சி கொரியர் சரக்கு முனையம் 2023 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் செயல்படாமல் இருந்தது. இப்போது அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. கூடிய விரைவில், இரண்டு மாதங்களுக்குள் சேவையைத் தொடங்குவோம் என்று தெரிவித்தார்.
 
இக்கூட்டத்தில் 25 கொரியர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் திருச்சி விமான நிலையத்தின் ஏற்றுமதி மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்து விவாதித்தனர். விமான நிலைய ஆணையம் இந்த டெர்மினலை பொது-தனியார் நிர்வாகத்தில் இயக்கவும் பரிசீலித்து வருகிறது.

தற்போது, திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கூரியர் செல்ல குறைந்தது மூன்று நாட்கள் ஆகிறது. ஆனால், விமான நிலைய கொரியர் டெர்மினல் செயல்படத் தொடங்கியதும், மருந்துப் பொருட்கள் கூட ஒரு நாளில் சிங்கப்பூர் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

இந்த சேவை குறித்து எக்ஸ்பிரஸ் கொரியர் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் எஸ்.ஏ. சையது கூறுகையில், "கொரியர் கட்டணம் குறைவதோடு, பார்சல் சென்று சேரும் நேரமும் குறையும். விமான நிறுவனங்கள் சரக்கு இட ஒதுக்கீட்டில் கொரியர் சேவைக்கு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்குவார்கள். தற்போது பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளுக்குப் பிறகு மீதமுள்ள இடத்தையே நாங்கள் பயன்படுத்துகிறோம்" என்றார்.

30 கிலோ வரை எடையுள்ள கொரியர்களை அனுப்பலாம். திருச்சி விமான நிலையம் வழியாக நேரடியாக அனுப்பும்போது, கட்டணம் 30 சதவீதம் வரை குறையும். தற்போது, திருச்சியிலிருந்து பெங்களூரு அல்லது சென்னை வழியாகவே கொரியர் சேவை நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமான நிலைய இயக்குனர் கூறுகையில், "சரக்கு போக்குவரத்தை உடனடியாகத் தொடங்குவதற்கான சாத்தியமான வழிமுறைகளை உருவாக்க விமான நிலைய ஆணையத்துடன் சரக்கு போக்குவரத்து துறையுடன் ஆலோசனை நடத்தப்படும்" என்றார். இந்த புதிய கொரியர் சேவை மூலம் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள். வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விரைவாகவும், குறைந்த கட்டணத்திலும் பார்சல் அனுப்ப முடியும்.

தற்போது வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கு தனியார் கொரியர் சேவையில்தான் அனுப்பி வருகின்றனர். தபால் துறையின் சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது திருச்சி விமான நிலைய முனையத்தில் இருந்து ஏர் கூரியர் சேவை மிகுந்த பயன் அளிக்கும் என்பதால் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை உட்பட சுற்றுப்புற மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/BXKVDj6xV1jE6ZPiwp79ix